Jan 29 2011
டவுண்
[wpvideo Sqk5XYtr]
Mar 03 2008
கனடாவில் வீதி வடிவமைப்புக்கள் மிகவும் திறமையாக அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், அதிக வாகனங்களின் காரணமாக, வீதி நெரிசல்கள் ஏற்படுவதுண்டு. இங்கே நான் கண்ட வாகன நெரிசல்களைத் தவிர்க்கும் வழிகளைக் கவனத்தில் கொண்டு எழுதுகிறேன்.
இங்கே கடுங்குளிரின் காரணமாக, வாகனம் ஒன்றாவது ஒரு குடும்பம் வைத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.
ஆனால், இங்கே போன்று தமிழீழத்திலும் வீதிகளை வடிவமைத்தால் போக்குவரத்து மிகவும் சீராக அமையும்.
எந்த வீதியிலும் இரு வாகனங்கள் ஒரே நேரத்தில் போகக்கூடிய வாறு அமைப்பது என்பது மிக மிக அவசியம். இது ஒரு வாகனம் மிகவும் மெதுவாக பயணிக்குமாயின், அடுத்து வரும் வாகனங்களும் தடைப்பட்டு ஒரு மிக நீண்ட வாகன நெரிசலை உண்டுபண்ணாமல் தடுக்க உதவும்.
இடம் இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு சந்தியிலும், வலது புற மற்றும் இடது புற திரும்பும் வாகனக்களுக்கு என்று தனியாக [புதிதாக] அமைக்க வேண்டும். ஏற்கனவே ஒரு திசையில் செல்லும் வீதியில் இருக்கும் இரண்டு வழிகளை விட இவ் வழிகள் அமைப்பது இப்படி வலது (அ) இடது புறம் திரும்பும் வாகனங்களால், பின்னுக்கு வரும் வாகனங்கள் காக்க நேரிடாமல் செய்யும். இப்படி புதிதாக உருவாக்கும் வழியில் ஒரு வாகனமேனும் மற்றய பின்னுக்கு வரும் வாகனங்களைத் தடுக்காமல் ஓரமாக நிற்க இயலுமாயின், அதுவே பெரிய வாகன் நெரிசலைத் தவிர்க்கக் கூடியது.
அப்படி வலது மற்றும் இடது புறம் திரும்பும் வாகனங்களுக்கு என்று தனியாக வழி அமைக்க இடம் போதாக் குறையாயின், வலது புறமாகத் திரும்பும் வாகனங்களுக்காவது புதிய வழி அமைத்தல் நன்று. தமிழீழத்தில் இடது புற ஓட்டுதல் முறை இருப்பதால், வலது புறம் திரும்புவதே கடினமான (அ) நேரம் எடுக்கும் செயலாகும். ஆகவே, வலது புறத்திற்குத் திரும்பும் வாகனங்களுக்கு மட்டுமாவது, சந்தியில், புதிய வழி அமைத்தால் வாகன நெரிசலைக் குறைக்கலாம்.
Sep 11 2007
அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதே தொழிலை தனிப்பட்ட முறையிலும் செய்யத் தடை விதிக்க வேண்டும்.
அரசாங்க சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு அதே தொழிலை ஒருவர் தனியாராக செய்தால் அவர் அரசாங்க தொழிலில் வரும் வாடிக்கையாளர்களை தனது சொந்த தொழிலுக்கு மாற்ற முயல்வார் (அ) தனது சொந்த தொழிலை அதி கூடிய கவனத்துடன் செய்வார். இதனால், அரசாங்கத்தின் தரம் குறையும்; அரசாங்கத்தின் மேலுள்ள மக்களின் நம்பிக்கை அற்றுப்போகும்.
கொழும்பில் தமிழ்ப் பாடசாலையில் பயிலும்போது எங்கள் கணித பாட ஆசிரியர் வகுப்பில் ஒரே நித்திரை கொள்வார். சரியாகப் படிப்பிப்பதும் கிடையாது. வகுப்பில் ஒருவருக்குமே அவரைப் பிடிக்கவில்லை. ஆனால், அவர் மாலை நேரத்தில் சொந்த tuition வைத்து சொல்லிக்கொடுத்துக்கொண்டு வந்தார். அங்கே அவர் மிகவும் கவனத்துடன் பாடம் நடத்தினார். அரசாங்க பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும், அட அதே பாடசாலை ஆசிரியர் ஆச்சே என்று அவரிடமே தமது பிள்ளைகளை tuition இற்கு விடுவார்கள். ஒரு மாணவரிடம் ரூ.100/ மாதம் அறவிட்டார். ஆனால், அவர் ஒளுங்காக பாடசாலையில் பாடம் படிப்பித்திருந்தால் tuition இற்குப் போகவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. அவரும் தனது tuition இற்கு மாணவர்களை வரவழைக்க அப்படி நடந்துகொண்டார்.
அதற்காக எல்லா ஆசிரியர்களும் அப்படி என்று சொல்ல முடியாது என்று வாதிடலாம். இவரைப் போல் ஒரு விஞ்ஞான ஆசிரியர் பாடசாலையிலும் நன்றாகப் படிப்பித்தார், தனது சொந்த tuition இலும் அதை விட நன்றாகப் படிப்பித்தார்.
இவை வெறும் ஆசிரியருக்கு மட்டுமல்லாமல் சகல உத்தியோகத்தர்களுக்கும் பொருந்தும். ஒரு building foreman/ engineer அரச வேலையை ஒழுங்காக செய்யாமல் (அ) தாமதப்படுத்தி தனது அதே சொந்தத் தொழிலைச் செய்யலாம். இதே போல் ஒரு வைத்தியரும் நடந்து கொள்ளலாம்.
ஆகவே, அரச உத்தியோகத்தில் உள்ளவர்கள் தனியாராக அதே தொழிலைச் செய்ய அனுமதிக்கக் கூடாது. இது அரசாங்கத்தின் தரம் கெட்டுப் போக வழி வகுக்கும்.
அரசாங்க உத்தியோகத்தர் தனியாராகவூம் அதே தொழிலை செய்பவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர் அந்த தனியார் தொழிலை விட்டு விலக ஒரு முறை குறைந்த பட்ச தண்டனை கொடுக்கலாம். அவர் அப்படி விலக மறுத்தால் (அ) மீண்டும் ஒருமுறை செய்தால் ஆகக் கூடிய தண்டனையாக, அந்த நபருக்கு இனிமேல் எந்த அரசாங்க வேலையும் கொடுக்கக் கூடாது என்று தண்டனை கொடுக்க வேண்டும்.
Sep 07 2007
சனநாயகம் மட்டும் தான் நல்ல வழி என்றில்லை.
சனநாயகம் என்ன சொல்கிறது? பெரும்பான்மை மக்களின் விருப்பிற்கு செல்வது சரி என்கிறது. அப்படியாயின் சிறுபான்மை மக்களின் பேச்சு எடுபடுவதில்லை தானே.
உலக நாடுகள் சனநாயகம் என்று சொல்பவர்கள் உண்மையில் அதைத் தான் செய்கிறார்களா? பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சுதந்திர வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று வந்தது. உடனே “சனநாயக” நாடுகள் என்ன சொன்னன? உதவிகள் அனைத்தையும் ரத்து செய்கிறோம். பொருளாராதாரத் தடை அந்தத் தடை இந்தத் தடை எல்லாம் போட்டன. அப்போ உண்மையில் இவர்கள் விருப்பம் சனநாயகம் தானா?
இதே சந்தர்ப்பத்தை அமெரிக்காவில் பாருங்கள். புஷ் போரை ஆரம்பித்த பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் புஷ் இக்குத் தான் பெரும்பான்மை. அவர் தன் போர் சரி என்று மேலும் தொடர்ந்தார். அப்போது இந்த “சனநாயத்தை” விரும்பும் நாடுகள் ஹமாஸ் இற்கு நடந்துகொண்டது போல் நடந்தனவா?
இதற்காக சனநாயகத்தைக் குறை கூறவில்லை. ஆனால், உலகிலேயே சனநாயகத்தை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்திய நாடுகள் கூட தங்கள் நலனுக்காக சனநாயகத்தை ஓரந்தள்ளக் கூட தயங்குவதில்லை. ஆனால் நாம், நம் நாடு குட்டிச்சுவராகப் போனாலும், மக்கள் செத்து மடிந்தாலும், இயற்கை வளம் அழிந்தொழிந்தாலும் நம் சனநாய விசுவாசத்தை [அடிமை விசுவாசம் என்று வாசிக்கவும்] பறைசாற்றி முட்டுக்கொடுத்து வருகிறோம்.
எங்கள் நாட்டின் கட்டுக்கோப்பான வளர்ச்சிக்கு எது அவசியமோ அந்தப் பாதையை நாம் சுயபுத்தியில் தேர்ந்தெடுக்க வேண்டும். யாரோ சனநாயகம் தான் சிறந்த வழி என்று சொல்கிறான் என்பதற்காக அந்தப் பாதையில் நடக்க வேண்டாம். நம் நாட்டிற்கு ஏற்றாற்போல் சனநாய வழியாக இருந்தால் கூட சில மாற்றங்களுடன் [அது சனநாயகத்திற்கு எதிராக இருந்தாலும்] செய்து நாட்டை கட்டுக்கோப்பாக வளரச் செய்
என்னைப் பொறுத்தவரையில் சனநாயகம் ஓரளவு வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கே பொருத்தம். சனநாயகத்தில் ஒரு முன்னெடுப்பை நடைமுறைப்படுத்த மிக நீண்ட காலம் எடுக்கும். வளர்ச்சி அடையாத, புதிதாக உருவாகிய நாடுகளுக்கு சனநாயத்தை விட அதிக கட்டுக்கோப்புடைய கட்டமைப்பே சிறந்தது. பையப் பைய சனநாயகத்திற்கு நாட்டை திருப்பலாம்.
சீனாவைப் பாருங்கள். இரும்புக் கரம் கொண்டு நாட்டை கட்டுக்கோப்பாக, உள்ளாட்சியை நிலைநாட்டினார்கள். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் அனுமதியே இல்லை. சனநாயகம் தான் தங்கள் வழி என்று எடுக்காமல், தம் நாட்டிற்கு எது சிறந்தனவோ அதைச் செய்கிறார்கள். இப்போது நாடு சற்று முன்னேறி விட்டது, அடிப்படைக் கட்டுமானங்கள் திறம்பட இருக்கின்றன. இனிமேல் சற்று இளக்கப்பாடான முறையைக் கையாளலாம் என்று தொடருகிறார்கள்.
தொடர்புடைய இடுகை:
சனாதிபதி/ பாராளுமன்றத் தேர்தல்
Aug 09 2007
சனாதிபதிப் பதவியோ வேறு எந்த தேர்தலில் போட்டியிட்டு வரும் பதவியோ இத்தனை தடவைக்கு மேல் போட்டியிட முடியாது என்று இருத்தல் கூடாது. அமெரிக்க சனாதிபதி இரு தடவைக்கு மேல் தெரிவுசெய்யப்பட இயலாது. இப்படியான சட்டங்கள், உண்மையான நல்லவர்களைத் தான் தடுக்கின்றன. கெட்டவர்கள் வேறு குறுக்கு வழி கண்டுபிடித்துவிடுவார்கள். இலங்கையில் முன்பு நடந்தது போல், சனாதிபதித் தேர்தல் நடத்த வேண்டுமா வேண்டாமா என்று ஒரு தேர்தல் கொண்டுவந்தார்கள். இதனால் காலம் இன்னும் நீடிக்கப்பட்டது. அப்படி இல்லையென்றால், இராணுவ ஆட்சி (அ) அவசர கால நிலை என்று ஏதாவது சொல்லி ஆட்சியைத் தக்கவைப்பார்கள்.
ஆனால், உண்மையிலேயே நாட்டுக்கு நல்லது செய்தவர்கள் சட்டத்திற்கு கட்டுப்படு விலகி நாட்டுக்கு நட்டமாகிப்போய்விடும்.
மகாத்மா காந்தி சொன்னது போல் 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது.
ஒன்றை யோசித்தீர்களா? ஏன் சனநாயகத்தில் அரசியல் கட்சிகள் அவசியம் என்று? உங்கள் வட்டாரத்தில் ஒருவருக்கு வாக்குப் போட ஆசை, ஆனால், அவரின் கட்சி குளறுபடி. அதே போல், இந்தக் கட்சிக்கு வாக்குப் போட ஆசை, ஆனால், எனது வட்டாரத்தில் கேட்பவருக்கு எனக்கு வாக்குப் போட விருப்பம் இல்லை.
ஒரே கட்சியில் இருந்தால் கூட ஏதோ ஒரூ தாதா கூட்டம்போல், எல்லோரும் ஒரு பக்கம் சாய்கிறார்களே. பாராளுமன்றத்தில், வோட்டு நடக்கும்போது, ஒட்டு மொத்த கட்சி அங்கத்தவர்களும் ஒரு பக்கம் சாய்கிறார்கள். அவ்வளவு ஒற்றுமையான கருத்தைய்யா அவ்வளவு பேரும் கொண்டிருக்கிறார்கள்? இல்லை, கட்சி என்று வந்துவிட்டோம் இனி எதையும் ஒரு கருத்தாகத் தான் எடுக்கவேண்டும் என்று எடுக்கிறார்கள். அதில் சிலருக்கு விரூப்பம் இல்லாவிடில் கூட கட்சியின் “நலன்” கருதி மற்றப் பக்கம் சாய்கிறார்கள். எதிர்க்கட்சீக்காரர்கள் எப்போது ஆளுங்கட்சி எதைக்கொண்டு வந்தாலும் அதை எதிர்த்து நிறுத்துகிறார்கள்.
வெள்ளைக்காரன் சொன்னதை செய்கிறோம். ஏன் நாங்களாகவே, சனநாயகமாக இருக்கட்டும், கட்சி என்ற ஒன்றே வேண்டாம் என்று யோசித்தோமா? கட்சி என்று ஒன்றில்லாமல், ஒவ்வொருவரும் தனித் தனி. இப்போ எனக்கு விருப்பமானவருக்கு நான் போடுவேன். பாராளுமன்றத்தில் வோட்டு நடக்கும்போது, அவர்கள் “கட்சி” என்ற கட்டுகோப்பு இல்லாமல், தாங்களாகவே முடிவெடுப்பார்கள். இப்போது கட்சி “நலன்” கருதாமல், தங்களுக்கு வாக்குப் போட்ட மக்கள் நலன் கருதுவார்கள் தானே?
இது மாலைதீவில் நடக்கிறது.
Jul 30 2007
திகதிகளை பல வடிவமைப்புக்களில் வெவ்வேறு நாடுகளில்/ வெவ்வேறு மொழிகளுக்கேற்ப எழுதுகிறார்கள். நீண்ட முறை [long format] என்றும் குறுகிய முறை [short format] என்றும் சாதாரணமாக கையாழ்கிறார்கள்.
17 ஜூலை 2007 – long format
17-07-2007 – short format
எந்த முறையில் கணியில் காட்டப்பட்டாலும் இயல்நிலை [default] ஆக அமெரிக்க முறையில் தான் சகல விதத்திலும் இருக்கும் வண்ணம் வடிவமைத்திருக்கிறார்கள். சேமிக்கும்போது , தானாக காண்பிக்கும்போது என்று அமெரிக்க முறையிலேயே காண்பிக்கப்படும். வேறு விதமாக வேண்டுமானால், அந்த திகதி வடிவமைப்பு முறையை மாற்றவேண்டும்.
மென்பொருள் எழுதுபவர்களுக்கு இது எப்போதும் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. இப்போது பல இலகுவாக்க வழிகள் வந்துவிட்டாலும், “09/11/2001″ என்று உபயோகித்தால் அது செப்டம்பர் மாதம் 11ம் திகதி என்றே கணக்கிலெடுக்கும். ஆனால் உங்களுக்கு நொவெம்பர் மாதம் 9ம் திகதி வெண்டுமென்றால், மென்பொருள் எழுதுபவர் அதற்கேற்ப மாற்ற வேண்டியிருக்கும்.
DD = திகதி
MM = மாதம்
YYYY = வருடம்
கனடா [ஆங்கிலம்]/ பிரித்தானிய முறை
DD/MM/YYYY
பிரஞ்சு முறை
YYYY-MM-DD
அமெரிக்க முறை
MM/DD/YYYY
இதில் மாதமும் திகதியும் எப்போதும் குழம்புப்பட்டுக்கொண்டிருக்கும்; திகதி 13 ஐ விடக் குறைவென்றால்.
கணினிமயமான உலகில் பல மென்பொருள்கள் அமெரிக்க திகதி வடிவமைப்பிலேயே இயங்குகிறது. கனடாவில் திகதி வடிவமைப்பு முறை வேறு என்றாலுங்கூட பல நிறுவனங்களில் ஊழியர்கள் அமெரிக்க திகதி வடிவமைப்பு முறையிலேயே பாவிக்க வேண்டி இருக்கிறது; ஏனெனில், அமெரிக்க மென்பொருளை உபயோகிப்பதால். கனேடிய முறை வேண்டும் என்பதற்காக மட்டுமே புதிய ஒரு மென்பொருள் பல இலட்ச செலவில் எழுத முடியாது தானே.
கணியில் இடும்போது “09/11/2001″ என்று இடாமல், “2001/11/09″ என்று இட்டால் அது உங்களுக்குத் தேவையான நொவெம்பர் 9ம் திகதி எனக் கணக்கிலெடுக்கும்.
இதே வடிவமைப்பை தாளில் [பேப்பரில்] எழுதும்போதும் பயன்படுத்தலாம். இந்த முறையில் ஒரு வசதியும் இருக்கிறது. எத்தனை பேர் திகதி எழுத எத்தணித்து விட்டு, அட இன்றைக்கு எத்தனையாம் திகதி என்று யோசித்துக்கொண்டிருப்பீர்கள். இது திகதி-மாதம்-வருடம் என்று எழுத எத்தணிப்பதால், முதலில் திகதி தெரியவில்லையென்றால் எழுதத் தொடங்காமலே யோசிப்பீர்கள். அப்படி இல்லாமல் வருடம்-மாதம்-திகதி, என்றால் உடனே முதல் இரண்டையாவது எழுதிவிடுவீர்கள். முதல் இரண்டை எழுதும் நேரத்தில் திகதியைக் கண்டுபிடித்துவிடுவீர்கள்.
ஆகவே, தமிழீழத்தில் “வருடம்-மாதம்-திகதி” என்ற குறுகிய முறையைக் கையாள்வது நலம் என்று நினைக்கிறேன். நீண்ட வடிவமைப்பு எவ்வாறாயினும் இருக்கலாம்.
Jul 10 2007
நம் நாடுகளில் இன்னும் பல ஊர்களுக்கு தமிழில் ஒரு பெயர், ஆங்கிலத்தில் ஒரு பெயர் என்று தானே இருக்கிறது?
அவனுக்கு வாயில் நுழைவதற்காக நாம் இன்னும் மாற்றாமல் இருக்கிறோம். அதே ஊர்க்காரன் ஒருவனிடம் முகவரி கேட்டு வருபவர் ஆங்கில பெயரைக் கேட்டால் ஊர்க்காரன் முழிப்பான். ஊர்க்காரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்று மற்றவர்கள் பழிப்பார்கள். ஏன்? யேர்மனியில், பிரான்சில், சப்பானில் என்ன தங்கள் ஊர்களின் பெயரை இப்படி இரு வேறாக பிரித்து வைத்திருக்கிறார்களா என்ன? நாம் இன்னும் அடிமைகளாக வாழ்ந்து அடிமைகளாக சிந்திக்கிறோம்.
பருத்தித்துரை = Point Pedro
மட்டக்களப்பு = Batticaloa
யாழ்ப்பாணம் = Jaffna
இப்படி பல ஊர்ப் பெயர்கள் தமிழில் ஒன்றாகவும் ஆங்கிலத்தில் ஒன்றாகவும் இருக்கிறது.
கனடாவில் கியூபெக் என்னும் பிரஞ்சு மக்கள் அதிகமாக குடியிருக்கும் மாகாணத்தில் உள்ள சில ஊர்ப் பெயர்கள்:
Notre-Dame-De-Lorette
Dollard-Des-Ormeaux
Côte-St-Luc
L’Ascension-De-Notre-Seigneur
Pierrefonds
Montréal
நாங்கள் சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டாலும் இன்னும் அடிமைக் குணம் போகவில்லையே.
தமிழீழத்தில் ஊர்ப் பெயர்கள் அந்த ஊரின் உண்மையான தமிழ்ப் பெயரிலேயே ஆங்கிலத்திலும் அழைக்கப்பட வேண்டும். மிகவும் நீளமான பெயர்கள் என்று கணிப்பிட்டால், தமிழ்ப் பெயரில் வரும் சொற்களில், அதிகமாகப் பயன்படுத்தப்படும் முதற் பாதி (அ) இறுதிப் பாதி சொல்லை ஆங்கிலத்தில் அழைக்கலாம். இது ஆங்கிலம் தெரியாதவர்களுக்குக் கூட தனது ஊரின்் பெயரைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
வீதிகளின் பெயர்களும் இவ்வாறே அமையவேண்டும்.
வீதிகளுக்கு மாவீரர்களின் பெயர்களைச் சூட்டலாம். அந்த தெருவில் வசித்த (அ) அந்த தெருவில் நடந்த சண்டையில் வீரச்சாவடைந்த முக்கியமான ஒரு மாவீரரின் பெயரைச் சூட்டலாம். எக்காரணங்் கொண்டும் அந்த தெருவிற்கு சம்பந்தமில்லாத மாவீரரின் பெயர் சூட்டப்படக்கூடாது.
மாவீரரின் பெயரை ஊர்ப் பெயருக்கு வைக்கக் கூடாது. எப்பொழுதும் ஊர்ப் பெயர் அந்த ஊரின் பொதுவான செயற்பாட்டை குறிக்குமுகமாக (அ) முக்கிய பூகோழ சின்னங்களுக்காக வைக்கப்படலாம்.
சேர்க்கப்பட்டது I [2007/07/19 @ காலை 9:00 GMT-5]:
எதிர்காலத்தில், ஊர்ப் பெயர், வீதிப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்றால், அது ஒரு இலகுவான காரியமாக அமையக் கூடாது. பல கட்ட செயற்பாடாக, பல அனுமதிகள் பெறவேண்டியதாக இருத்தல் வேண்டும். பெயர் மாற்றப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு [50 வருடங்கள்?] மறுபடியும் பெயர் மாற்றம் கொண்டுவர முடியாததாக இருத்தல் வேண்டும். இல்லையேல் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை என பெயரை மாற்றிக்கொண்டே போய்விடுவார்கள்.
Jun 17 2007
கனடாவில் நிங்கள் ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு அந்த நிறுவனப் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.
அந்த பதிவுப் பத்திரம் ஆங்கிலத்தில் (அ) பிரஞ்சு மொழியில் மட்டும் தான் இருக்கும்.
கனடாவின் ஒரு மாகாணம் கியுபெக். கியூபெக் அரச கரும விண்ணப்பப் படிவங்கள்,
பிரஞ்சு மொழியிலேயே இருக்கும். ஆங்கில பிரதி தருவார்கள். ஆனால் அதை
உபயோகிக்க இயலாது [void என்று எழுதி இருக்கும்]. பரவாயில்லையே என்று
யோசிக்கிறீர்களா? அந்த பிரஞ்சு விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் பிரஞ்சில்
தான் நிறப்ப வேண்டும்!
இங்கே தமிழ் நிறுவனப் பெயரை பதிவுசெய்ய பல ஆங்கிலப் பெயர்களை பதிவுசெய்யவேண்டிய கட்டாயமாக இருக்கிறது. ஏன்? “காந்திமதி” என்ற பெயருடைய நிறுவனத்தை பதிவு செய்ய ஆங்கிலத்தில் “kanthimathi”, “Ganthimathi”, “Gandhimadhi” இப்படி பல மாறுபட்ட பெயர்களை பதிவு செய்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பணம் கட்டவேண்டும். ஏனென்றால், வேறு ஒருவர் “காந்திமதி” என்றதை வித்தியாசமான ஆங்கில உச்சரிப்பில் பதிவு செய்யலாம்.
இதே போல் தமிழீழத்தில் எந்த நிறுவனப் பெயரையும் தமிழில் தான் பதிவு செய்யவேண்டும் என்று சட்டம் வேண்டும். ஆங்கில நிறுவனப் பெயர்களை வேறுபட்ட தமிழ் உச்சரிப்புக் கொண்ட எழுத்துக்கள் கொண்டு பதிவு செய்ய வேண்டிவரும். இதனால், பல தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களுக்கு, வழக்கறிஞர்களுக்கு, கணக்காளர்களுக்கு வேலை வரும். இதனால் வேலைவாய்ப்பு உள்ளதால், மேலும் தமிழ் கற்க முன்வருவார்கள்.
May 16 2007
எந்தெந்த தொழில்கள் மனித அடிப்படை அத்தியாவசியத்திற்கு தேவையோ அவை தமிழீழ அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் [நீர், மின்சாரம், தபால் சேவை, உள்ளூர் பேரூந்து சேவை, புகையிரத சேவை]. அது ஒரு நியாயமான விலையை அப் பொருள்களுக்கு/ சேவைக்கு வழங்கும். இலாபத்திற்கு என்று விலைகள் அளவுக்கதிகமாக உயராமல் இருக்க உதவும்.
எந்தெந்த தொழில்கள் சமூக நலனை பாதிக்குமோ அவை அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் [மதுபானம், சூதாட்டம், அதிட்ட லாபச் சீட்டு] அது ஒரு ஒழுங்கு முறையை கடைப்பிடிக்க உதவும். நேரங்கடந்த விற்பனையோ/ தரம் கெட்ட விற்பனையோ நடக்காமல் இருக்க உதவும்.
May 16 2007
எந்த மத சமய ஆலயங்களும் ஒரு நிறுவனம் போல் கருதப்பட வேண்டும்.
அதாவது சமய கோவில்கள் ஒரு இலாப நோக்கற்ற தாபனமாகக் கருதி வரி விலக்கீடு கொடுக்கக் கூடது. பல சமய தாபனங்கள் இந்த வரி விலக்கீடு முறையால் பலமடங்கு இலாபம் அடைந்தாலும், நாட்டிற்கு என்று எந்தப் பங்கும் கொடுப்பதில்லை. இந்த வரி விலக்கீடு காரணமாகவே பலர் சமய ஆலயங்களை நிறுவுகிறார்கள்.
சைவ, கிறிஸ்தவ, முஸ்லிம் என்று எந்த மத கோவிலாக இருந்தாலும் அதை ஒரு நிறுவனமாகக் கருதி வரி வசூலிக்கப்பட வேண்டும். எவ்வாறு ஒரு நிறுவனத்திற்கு ஒவ்வொரு கட்ட இலாபத்திற்கும் வரி வசூலிக்கப்படுகிறதோ, அவ்வாறு வரி வசூலிக்கப்பட வேண்டும்.
இலாபம் இல்லாவிடில் என்ன என்ற கேள்வி எழுகிறது. இலாபம் இல்லாவிடினும் ஒரு குறிப்பிட்ட வரி நிறுவனங்கள் செலுத்த வேண்டும். அதே போல் சமய ஆலயங்களும் செலுத்த வேண்டும்.
ஒரு நிறுவனம் ஒரு கோவிலுக்கு 1000 நன்கொடையாக கொடுத்தது என்றால் கோவிலும் அந்த 1000 வருமானமாகக் காட்டவேண்டும். ஏனெனில், அந்த நிறுவனம் இந்தக் கோவிலுக்கு இவ்வளவு நன்கொடையாகக் கொடுத்தது என்று தனது வருமான கணக்கில் காட்டும். கோவில் 1000 வருமானமாக காட்டாவிட்டால் அது சட்டத்திற்கு புறம்பானதாகக் கருதப்படவேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், ஒரு நிறுவனத்திற்கும் சமய கோவிலுக்கும் வித்தியாசம் காட்டப்படக் கூடாது வணிக முறையில்.